கண்ணிகள்
தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே - சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே - சிவன் அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே. | 1 |
நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றே நித்திய மென்றே பெரிய முத்தி யென்றே பாடுபடும் போதுமாதி பாத நினைந்தே பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே. | 2 |
பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப் பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய் மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும் வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே. | 3 |
எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்த ஈசன் பதவாசமலர் எண்ணி யெண்ணியே உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே ஒடுங்கிய டங்கித்தெளிந் தாடு பாம்பே. | 4 |
அண்டபிண்டந் தந்த வெங்கள் ஆதிதேவனை அகலாம மேலநினைந் தன்புடன் பணிந்து எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே ஏகமன மாகநாடி யாடு பாம்பே. | 5 |
சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத் தொழுதழு தலற்றிற் தொந்தோந்தோ மெனவே நீதிதவ றாவழியில் நின்று நிலையாய் நினைந்து நினைந்துருகி யாடு பாம்பே. | 6 |
அருவாயும் உருவாயும் அந்தியாயும் அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும் திருவாயுங் குருவாயும் சீவனாயும் செறிந்தவஸ் துவைப்போற்றி யாடு பாம்பே. | 7 |
சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச் சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை எடுத்து விரித்துநின் றாடு பாம்பே. | 8 |
எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய் இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர் அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே. | 9 |
குரு வணக்கம் சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே தானம் வாங்கி நின்ற வெங்கள் சற்கு ருவினைப் போற்றி மனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப் புகர்ந்து புகழ்ந்துநின் றாடாய் பாம்பே. | 10 |
பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப் புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும் மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும் மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே. | 11 |
வேதப்பொருளின்ன தென்று வேதங் கடந்த மெய்ப்பொருளைக்கண்டுமனம் மேவிவிளம்பிப் போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும் பூரணசற் குருதாள்கண் டாடாய் பாம்பே. | 12 |
உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக் கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க் சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே. | 13 |
அங்கையிற்கண் ணாடிபோல ஆதி வஸ்துவை அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச் சங்கையறச்சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே தமனியப் படமெடுத் தாடாய் பாம்பே. | 14 |
காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டுபின் கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்காலமும் வாழும் தூயநிலை கண்டபரி சுத்தக் குருவின் துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே. | 15 |
கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கை யுடைய குருவின் வல்லபமெவர் கூற வல்லவர் வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும் மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே. | 16 |
அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும் அடக்கிய குளிகையோ டாடி விரைவாய் வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே. | 17 |
கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங் கடமழி யாதுவாழுங் காரணக்குரு பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே. | 18 |
வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்கு மாயினும் வல்லுடம்புக் கோர் குறை வாய்த்தி டாது மெச்சகட முள்ள வெங்கள் வேத குருவின் மெல்லடி துதித்துநின் றாடாய்பாம்பே. | 19 |
பாம்பினது சிறப்பு நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே பாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே. | 20 |
வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே மண்டலமிட் டுடல்வளை வண்ணப் பாம்பே தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே தலையெடுத் தேவிளையாடு பாம்பே. | 21 |
குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய் கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய் கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய் கரவாமல் உளங்களித் தாடு பாம்பே. | 22 |
மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய் மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய் கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய் கண்ணேசெவி யாகக்கொண்டாய் ஆடு பாம்பே. | 23 |
சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய் சங்கரனுக் காபரணந் தானுமாகினாய் மந்திரத்திற் கடங்கினாய் மண்டல மிட்டாய் வளைந்து வளைந்துநின் றாடு பாம்பே. | 24 |
சித்தர் வல்லபங் கூறல் எட்டுநாகந் தம்மைக்கையா லெடுத்தேயாட்டுவோம் இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம் கட்டுக்கடங் காதபாம்பைக் கட்டி விடுவோம் கடுவிஷத் தன்னைக்கக்கி யாடு பாம்பே. | 25 |
ஆதிசேடன் ஆயிகினுமெம் மங்கையி னாலே ஆட்டிவிடு வோமெங்கள் ஆக்கினைக்குள்ளே நீதியோடங்கியே நின்றிடச் செய்வோம் நின்றநிலை தவறாமல் ஆடுபாம்பே. | 26 |
தூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம் துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம் ஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம் ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே. | 27 |
எட்டுமலை களைப்பந்தாய் எடுத்தெ றிகுவோம் ஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம் மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம் மகாராஜன் முன்புநீ நின் றாடுபாம்பே. | 28 |
மண்டலமுற் றுங்கையால் மறைத்து விடுவோம் வானத்தையும் வில்லாக வளைத்து விடுவோம் தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம் தோன்றலுக்கு முன்பு நின் றாடாய் பாம்பே. | 29 |
மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கிவருவோம் முந்நீருள் இருப்பினு மூச்ச டக்குவோம் தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம் தார்வேந்தன் முன்புநீ நின் றாடு பாம்பே. | 30 |
செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம் செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம் இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம் எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே. | 31 |
வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம் வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம் நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம் நாங்கள் செய்யும் செய்கையிதென் றாடு பாம்பே. | 32 |
அறுபத்து நாலுகலை யாவு மறிந்தோம் அதற்குமே லொருகலை யான தறிந்தோம் மறுபற்றுச் சற்றுமில்லா மனமு முடையோம் மன்னனே யாசானென் றாடு பாம்பே. | 33 |
சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச் சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம் வீறுபெருங் கடவுளை எங்களுடனே விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே. | 34 |
Could you please give me an English translation of this poem
ReplyDelete