சரீரத்தின் குணம்
ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம் வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே. | 60 |
இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையா யிருப்பினு மந்தச் சூளை அரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே. | 61 |
பரியாசம் போலவே கடித்த பாம்பு பலபேரறியவே மெத்த வீங்கிப் பரியார மொருமாது பார்த்த போது பையோடே கழன்றதென் றாடாய் பாம்பே. | 62 |
சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமுஞ் சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது உடைந்தால் நாயுநரி யும்பெரிய பேயுங் கழுகும் நமதென்றே தின்னுமென் றாடாய் பாம்பே. | 63 |
நீரிலெழும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்றனைப் பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே. | 64 |
நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால் நாளுங்கழு வினுமதன் நாற்றம் போமோ கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால் கொண்ட மலம் நீங்காதென் றாடாய் பாம்பே. | 65 |
காய்த்தமர மதுமிக்க கல்லடிப்படும் கன்மவினை கொண்டகாயம் கண்டனை பெறும் வாய்த்ததவ முடையவர் வாழ்பவ ரென்றே வத்துத்திரு வடிதொழு தாடாய் பாம்பே. | 66 |
பேசரிய நவவாயிற் பீற்றல் துருத்தி பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சே ஈசனிலை அறியாருக் கிந்தத் துருத்தி எரிமண்ணிற் கிரைமென் றாடாய் பாம்பே. | 67 |
மரப்பாவை போல வொரு மண்ணுருச் செய்து வளமான சீவனென்னுஞ் சூத்திரம் மாட்டித் திரைக்குள்ளி ருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே தேகம்விழு மென்றுதெளிந் தாடாய் பாம்பே. | 68 |
தசநாடி தசவாயு சத்த தாது சார்ந்தமரக் கப்பலது தத்தி விழுமே இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில் எந்நாளும் ஓட்டத்துணிந் தாடாய் பாம்பே. | 69 |
Comments
Post a Comment